சென்னையில் இசை அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான ஏ.ஆர்.ரகுமானின் திட்டத்துக்கு உதவ அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 10ம் தேதி ஏ.ஆர் ரகுமான் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரகுமான், கர்நாடகாவின் பெங்களூரில் இசை கலைஞர்களுக்கான பிரத்தியேக அருங்காட்சியகம் உள்ளது. அதே போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்.
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட பலரையும் போற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைப்பது தேவையான ஒன்று. அதற்கான எண்ணம் என்னிடம் உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இசை அருங்காட்சியகம் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமானிடம் ஆக்கப்பூர்வமான திட்டமும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் தமிழக அரசு உதவ தயாராக இருக்கிறது. மேலும் அருங்காட்சியங்களை அமைக்கவும் அரசு உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்.