பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ப.ஜ.கவின் துணைச் செயலர் கொலை!

download 5 2
download 5 2

ஜம்மு காஷ்மீர்- குல்காம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணை செயலாளர் சஜாத் அகமது மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை, சஜாத் அகமது, தனது வீட்டின் முன்னாள் நின்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி இரத்து செய்து, குறித்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இவ்வாறு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்தது. எனவே அங்கு அசம்பாவித சம்பவங்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தக் கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பா.ஜ.க.துணை செயலாளர் சஜாத் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு பிரயோகம் நடத்தி இன்று கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.