இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைவருமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதிய 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.