பொருளாதார வீழ்ச்சிக்கு திறமையற்ற தலைமைத்துவமே காரணம்

download 6 1 1
download 6 1 1

அரசாங்கத்தின் செயற்திறமை மற்றும் முறையான தலைமைத்துவம் இல்லாமையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வாழ்க்கைச்செலவு அதிகரிக்க காரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றது. பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை அடைக்க முடியாதிருக்கின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கைச்செலவை சமாளிக்க முடியாது கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த நிலைமையை பாேக்க அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. அரசாங்கத்தின் இந்த நிலைக்கு அரசாங்கத்தின் செயற்திறமை இல்லாமை மற்றும் முறையான தலைமைத்தும் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.

மேலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் நாட்டின் கடன் தவணைகளை முறையாக செலுத்திவந்தோம். மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம். நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தோம். கிராம எழுச்சி வேலைத்திட்டம் மூலம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். இதற்கு சிறந்த அரசியல் முகாமைத்துவமே காரணமாகும்.

அத்துடன் அரசியல் அனுபவம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் விளைவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. டொலரின் பெறுமதி 205ரூபாவரை உயர்ந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதனால்தான் நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. திறமையற்ற தலைமைத்துவமே இதற்கு காரணமாகும்.

2015இல் ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் ஆட்சிக்கு வரும்போதும் நாட்டின் பொருளாதார நிலைமை இவ்வாறுதான் இருந்தது. அவ்வாறு இருந்தும் ஆட்சிக்கு வந்து சில தினங்களிலேயே இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பித்து மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தோம். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தோம். ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் செயற்திறமை மற்றும் அரசியல் முகாமைத்துவமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்ததில் மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு 160 ரூபா அதிகரித்து வழங்கி இருக்கின்றது. அதனையும் ஒரு பகுதியினருக்கே வழங்கி இருக்கின்றது. அதனால் 160 ரூபாவைகூட வழங்க முடியாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியிருக்கின்றது என்றார்.