அமெரிக்காவில் 16 வயது கறுப்பின சிறுமியொருவர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மா கியா என்ற 16 வயதான இச்சிறுமி ஒருதரப்பினரை கூரிய ஆயுதத்தால் தாக்கமுயன்றபோது, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது. எனினும், குறித்த சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான காரணம் தெளிவாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் ப்ளொயிட் கொலை வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியென நீதிபதிகள் குழாம் தீர்ப்பளிப்பதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்து கொலம்பஸ் காவல்திணைக்களம் உள்ளிட்ட பல பகுதிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.