வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
வட மாகாணத்தில் தற்போது வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வட மாகாண விவசாயிகள் ஆர்வமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர்வேளாண்மையை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயங்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சி.பி. ரத்நாயக்கா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தம்மிடம் உறுதியளித்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.