யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் வந்தவர்களே உள்ளனர். அதனை ஏற்கமுடியாது. நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கோரி பல்கலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக முன்றலில் தொடர் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமக்கான நீதி நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இனியும் தாமதிக்காது சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.
அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலால் பாதிக்கப்பட்டோர் தங்களது நியாமான கோரிக்கைகளை பல்வேறு தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
ஆயினும் உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ இதற்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை.
ஆகையினால் இப்பிரச்சினையை வெளிக்கொணரும் முகமாக இன்று காலை முதல் யாழ் பல்கலை முன்றலில் தமக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தள்ளனர்.