ஜப்பானில் கடந்த 1963ஆம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் அமைச்சர் ஒருவர் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரை சுட்டுக்கொன்றனர்.
அதன் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன. இதனால் சில பிரதமர்கள் அங்கு தங்குவதை தவிர்த்துவந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யொஷிஹிடே சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் தங்குவதை தவிர்த்தனர்.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர்.
ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ நேற்று முன்தினம் பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலக்கு குடி பெயர்ந்தார். அங்கு முதல் நாளை எப்படி கழித்தார் என்பது குறித்து நேற்று அவர் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என நகைச்சுவையாக கூறினார்.