கம்பஹா மாவட்டம், கொட்டதெனியாவ காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த உறவினர்களான இரு சிறுவர்கள் காணாமல் போன விவகாரத்தின் மர்மம் கடந்த 38 நாட்களாக நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை சிறுவர்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விசாரணைகள் கொட்டதெனியாவ காவல்துறையினரிடம் இருந்து சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய இந்த விவகார விசாரணைகள், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சி.ஐ.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் மனிதப்படுகொலை பிரிவின் உதவி காவல்துறை அத்தியட்சர்களான களு ஆரச்சி மற்றும் கமகே ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் இந்த சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளுக்கு அமைய அச்சிறுவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.
இவ்வாறான பின்னணியில் அந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்ப்பர்ப்பதாக காவல்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்திருந்தது.
10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் காணாமல்போயுள்ள சிறுவர்களின் விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அதில் 10 வயதான திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும் எனும் சிறுவன், 4 அடி உயரமானவர் எனவும் சற்று பருமனான உடற் தோற்றத்தை கொண்டவர் எனவும், தலைமுடியை கட்டையாக வெட்டியிருந்ததாகவும், மேல் வரிசை பற்களில் இரண்டு விழுந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் அடையாளமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக நீல நிற ரீ சேர்ட் ஒன்றினையும் , கறுப்பு சிறிய சதுரங்களைக் கொண்ட அரைக் காற் சட்டை ஒன்றினையும் அவர் அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் காணாமல் போன மற்றைய சிறுவன் ஜயசேகர முதலிகே அகில தேதுணு எனும் 12 வயதனவர் என காவல்துறையினர் கூறுகின்றனர். உடலமைப்பில் சற்று பருமனான அவர், 4 அடி 10 அங்குலம் உயரமானவர் என காவல்துறையினர் கூறினர். தலை மயிரை கட்டையாக வெட்டியுள்ள அவரின், மேல் பல் வரிசையில் பற்கள் சில முன்னோக்கி தள்ளுண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளமாக தெரிவித்துள்ளனர்.
அவர் இறுதியாக நீல சிற காலர் உடன் கூடிய ரீ சேட்டினையும், சிவப்பு நிற அரைக் காட்சட்டையையும் அணிந்திருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்திருப்பின் சி.ஐ.டி.யின் உதவி காவல்துறை அத்தியட்சர் களு ஆரச்சியின் 0718592867 எனும் இலக்கத்துக்கோ அல்லது உதவி காவல்துறை அத்தியட்சர் கால்லகேயின் 0718592868 எனும் இலக்கத்துக்கோ அறிவிக்குமறு காவல்துறை சி.ஐ.டி.யினர் கோரியுள்ளனர்.