வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லவும், அங்கு பூசை, வழிபாடுகளை நடத்தவும் ஆலய நிர்வாகத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே, நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர் நேற்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு தொல்பொருள் திணைக்களத்தின் கடிதம் காண்பிக்கப்பட்டது. அந்த கடிதம் தனிச் சிங்களத்தில் இருந்தது.
தொல்பொருள் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதானம் செய்யவோ, திருவிழா நடத்தவோ முடியாது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாக அவர்களுக்கு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வெடுக்குநாறி ஆலய விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதனை ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியபோதும் அதை பொலிஸார் ஏற்கவில்லை.