‘ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு பொருந்தும் விடயங்களை முழுமையாக செயற்படுத்துவார்கள்’: அதாவுல்லா

01
01

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு பொருந்தும் விடயங்கள் முழுமையாக செயற்படுத்துவார்கள் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது தீவிரவாதத்ததை ஒழித்தல், வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு தனி மாகாணமாக செயற்படல் மற்றும் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம்.

தேசிய காங்கிரஸ் சார்பில் முன்வைத்த பிரதான மூன்று கோரிக்கைகளில் தீவிரவாததத்தை ஒழித்தல், கிழக்கு மாகாண சபை உருவாக்கம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி வகித்தவேளை நிறைவேற்றியுள்ளார்.

அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைய புதிய அரசியமைப்பு உருவாக்கம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பல அரசியல் காரணிகள் அக்காலக்கட்டத்தில் தாக்கம் செலுத்தின.

2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளோம். பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி அக்கட்சி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமைந்துள்ளது. அத்துடன் ஆளும் தரப்பினருக்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

இதனால், புதிய அரசியமைப்பினை இலகுவில் உருவாக்க முடியும். நாட்டு மக்கள் அனைவரது அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியமைப்பு உருவாக்கத்தில் உள்ளடங்க வேண்டும். எமது நாட்டு அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிற நாட்டவர்கள் தயாரிக்க முற்படும் போது அது முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்பதை கடந்தகால சம்பவங்களின் ஊடாக அறிந்துக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.