கொவிட் -19 இன் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக முகக்கவசம் அணியாது பயணிப்பவர்களை தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் வவுனியா காவற்துறையினர் விடுவித்து வருகின்றனர்
.
இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது முகக்கவசம் அணியாது பயணிக்கின்றனர்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு காவற்துறை பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.குருசிங்க அவர்களின் தலைமையிலானகாவற்துறையினர் இன்று (26.10) வவுனியா பழைய பேருந்து நிலையம் மற்றும் வவுனியா நகரப்பகுதிகளில் முகக்கவசம் அணியாது செல்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை பதிவு செய்து கடும் எச்சரிக்கையின் பின் விடுவித்து வருகின்றனர்.
இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்வர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து விட்டு வாகனத்தினை எடுத்துச் செல்லுமாறும் காவற்துறையினர் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர். கொவிட்- 19 பரம்பலைக் கடுப்படுத்த காவற்துறையினர் எடுத்துள்ள இவ் நடவடிக்கை வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.