தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 12 ரூபா குறைந்தபட்ச கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-
“கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தனியார் பொது போக்குவரத்து சாதனங்களுக்குள் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றுவதாயின் அரசாங்கம் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கொவிட் – 19 வைரஸ் முதலாம் தாக்கம் ஏற்பட்ட காலத்தில் தனியார் பஸ் சங்கத்தினருக்கு வழங்கிய வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கருத்திற் கொண்டே ஓர் ஆசனத்தில் ஒருவர் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கத் தீர்மானித்தோம். இதற்காக 12 ரூபா குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக குறுகிய காலத்துக்கு அதிகரிக்குமாறு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் ,அரசாங்கம் எமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அல்லது நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடின் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்”எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.