யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி – பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இன்று(11.21.2020) திடீரென உயிரிழந்தார்.
அதனால் அவரது சடலத்தில் மாதிரிகள் இன்று(11.21.2020) காலை பெறப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. எனினும் அவருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.