சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு

6 shantha
6 shantha

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில், சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு நேற்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்டதொரு நேரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி, பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது.

அத்துடன், ஒவ்வொரு மாதாந்தத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, சிலாபம் பொலிஸ் நிலையம் வந்து கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எனினும் அவர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.