தேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்

5 ddgd
5 ddgd

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்குமாறும் வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

வாக்வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்த அளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.