ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுசெயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் இலங்கையில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யோசனை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் அவர்களால் நிராகரிக்கப்பட்டன.
அத்துடன் எம்.ஏ.சுமந்திரன் காலநீடிப்பு வழங்க முயற்சிப்பதாகவும் அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை சுமந்திரன் நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயத்தை கையாள முயற்சிப்பதாக தெரிவித்தார்.