‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ மாபெரும் கவனயீர்ப்பிற்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவு!

IMG 20170819 WA0024 1
IMG 20170819 WA0024 1

சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக இன்று 2021.02.03ஆம் திகதி தொடக்கம் 2021.02.06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை’ மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாட்டில் சிறுபாண்மை இன மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு எதிராக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு எமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றினைவே சிறுபாண்மை இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளை எதிர்கொள்ள உறுதுணையாக அமையும் என யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் தலைவர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, உரிமை மறுப்பு போன்ற சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இம்மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் சகோத உறவுகளாக ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபாண்மை (தமிழ் – முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், இம் மாபெரும் பேரணியையும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றும், இந் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

‘அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.