பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி குழு அமைக்கும் விக்கினேஸ்வரன்

20210211 115702
20210211 115702

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி குழு அமைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்தில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்று கிளிநொச்சியில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 6,7 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்றும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத்தான் ஏதோ குற்றம்சாட்டி கைது செய்து கொண்டுபோனதாக கூறியிருந்தார்கள்.

இது சம்பந்தமாக சி.ஐ.டி யினரிடம் நான் பேசியிருந்தேன் அவர்கள் கூறும் விடையங்கள் வித்தியாசமாக இருக்கின்றது இவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும், புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்கள். அவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா பீடித்ததால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் இவற்றை பார்க்கும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு பிரச்சினைகளை, தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் எங்களுடைய மக்களை பயமடைய செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், காவல்துறையினரையும் ஏவி இவ்வாறு செய்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து.

எனவே இது சம்பந்தமாக நாங்கள் வழக்குகள் தாக்கல் பண்ண வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இவர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அனுகுவது என ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.