அரசாங்கத்தின் அடிமைகளாக 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக செ.கயேந்திரன் கருத்து

download 5 5
download 5 5

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன், பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும் அடிமைகளாகவும் இருப்பதாக யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இது எமது நீதிக்கான போராட்டம். இலங்கையில் இருக்கும் கட்டமைப்புகளால் தமிழர்களின் பிரச்சனைகளிற்கான நீதி கிடைக்காது என்பது நிரூபனமான வகையிலேயே சர்வேதச குற்றவியல் நீதிமன்றை நோக்கி நாங்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதில் நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு முன்பாக சரியான முயற்சிகளை செய்திருக்கிறோமா என்பதை நோக்கவேண்டும். அத்துடன் சர்வதேசத்தை நோக்கிசெல்லும் போது பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் பிரதிநிதிகள் நேர்மையாக செயற்படவேண்டும். கடந்த ஜனவரிமாதம் அனைத்த தரப்பாலும் ஒரு காத்திரமான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அந்தவிடயத்தை முற்றாக வெறிதாக்கும் வகையில் சுமந்திரனதும் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கிறது.

தமிழ் கட்சிகளால் மனித உரிமை பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள விடயங்களிற்கு வலுச்சேர்க்கும் விதமாக பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான பேரணி நடாத்தப்பட்டது. ஆனால் அது அப்படியல்ல என்று வடகிழக்கில்உள்ள 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பத்துபேரைகொண்ட அணியின் பேச்சாளர் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு மேல் உலகம் என்ன முடிவை எடுக்கமுடியும்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாக அடிமைகளாக இருக்கிறார்கள். இந்தநிலையில் கூட்டமைப்பு இவ்வாறான கருத்தினை சொல்லிவந்தால் நாங்கள் உலகத்தை நம்பவேண்டாம் என்ற முடிவிற்கு எப்படி வரமுடியும்.

இங்கு எங்களுடைய விரல்களே எமது கண்களை குத்தியிருக்கிறது. எனவே மக்கள் விழிப்படைய வேண்டும். சரியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகத்தை நோக்கி செயற்பட்டால் இந்த பூகோளபோட்டியை எங்களுக்கு சாதகமாக்கிகொள்ள முடியும். அதில் நம்பிக்கை இருக்கிறது என்றார்.