மஹா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஆன்மிக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும். இந் நன்னாளில் இறையருளால் நிச்சயம் ஆன்மிக பலம் பெறுவார்கள் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் இந்துச் சகோதர மக்களுக்கு அர்த்தம் பொருந்திய, மகிழ்ச்சிகரமான நன்னாளாக இந்த சிவராத்திரி தினம் அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.