மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அஸாத் ஸாலி ஆளுநர் பதவியில் இருந்தவேளையில் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும், அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் எவ்வாறு பாடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ.டி. இணைந்து சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளன.
மாவனெல்லயில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரம் மற்றும் வணாத்தவில்ல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பாதுகாத்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆளுநருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், முஸ்லிம் பள்ளிவாசல்கள், உள்ளூர் மதரஸாக்களில் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்கு உதவியது போன்ற குற்றச்சாட்டின் பேரிலும் அஸாத் ஸாலி விசாரிக்கப்படுகின்றார்” – என்றார்.