அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியே மே தின நிகழ்வு தடைக்குக் காரணம்! – ஜே.வி.பி

anura
anura

மே தினப் பேரணியை அரசு நடத்த முடியாத நெருக்கடியில் இருப்பதால்தான் மே தின நிகழ்வுகள் அனைத்தும் கொரோனாத் தடுப்புச் செயலணியால் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

“அரசுக்குள் இன்று மோதல் வலுப்பெற்றுள்ளது. அரசின் பங்காளிக் கட்சிகள் எந்த அரசியல் மேடையில் ஏறுவது என்பதில் குழப்பமடைந்துள்ளனர்” என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சி மேலும் தெரிவிக்கையில்;

“மே முதலாம் திகதி நடைபெறவிருக்கும் மே தின நிகழ்வுகளை நிறுத்துவதென எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு நாங்கள் இணங்கவில்லை.

சுகாதார நடைமுறைகளைக் கவனத்தில் எடுத்து மே தினத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக தீர்மானம் எடுப்பதாயின், சுகாதார விதிமுறைகளைக் கவனத்தில்கொள்ளாத பல நிகழ்வுகள் கடந்த காலங்களின் நாட்டில் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கிராமத்துடன் கலந்துரையாடல் என்ற தொடர் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதேபோல்,சிங்கள – தமிழ் புதுவருட காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினார்கள்.அப்போது இடம்பெறாத காரணத்தைத் தற்போது உருவாக்கி அதனை முன்கொண்டு செல்ல அரசு எதிர்பார்க்கின்றது.

இதன் மூலமாக அரசுக்குள் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி காரணமாக, அரசால் மே தினப் பேரணியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது” – என்றார்.