பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமத்தி வருகின்றது.
இது தொடர்பாக தொழில் ஆணையாளர் பெருந்தோட்ட கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தொழில் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பின் பின்பு தொழிலாளர்கள் மீது அவர்களுடைய தொழில் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள்.
தொழிலாளர்களை அடிமைகளை நடத்துவது போல நடத்த முற்படுகின்றார்கள். ஒரு சில தோட்ட அதிகாரிகள் அடாவடித்தனமாகவும் தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைகள் எனவும் நினைத்து செயற்படுகின்றார்கள். இது தொடர்பாக தொழிலாளர்கள் தொடர்ந்தும் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
எனவே, இந்த விடயம் தொடர்பாக தாங்களுடைய தலைமையில் கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்து இந்த முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாங்களை கேட்டுக் கொள்வதுடன்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவரும் பட்சத்தில் தொழிலாளர்கள் பொறுமை இழந்து அமைதியற்ற ஒரு நிலைமை ஏற்படலாம். எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.