புதுக்குடியிருப்பு சிகிச்சை நிலையத்தில் தண்ணீருக்கு கூட தட்டுப்பாடு!

IMG 20210518 WA0209
IMG 20210518 WA0209

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லுவது முதல் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சுகாதாரத்துறையினர் அசௌகரியங்களை எதிர்கொண்டு உள்ளதாக அறிய முடிகின்றது.

நேற்று முன்தினம் ஆடைத் தொழிற்சாலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிகளவான தொழிலாளர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக புதுக்குடியிருப்பு கைவேலி திப்பிலி பகுதியில் அமைந்திருக்கின்ற சிகிச்சை நிலையத்திற்கு அதிகளவானவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலைமையில் அதிகாரிகளின் மிகக் கடினமான முயற்சி காரணமாக இரவு பகலாக நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலைமையில் புதுக்குடியிருப்பு கைவேலி திம்பிலி பகுதியில் அமைந்திருக்கின்ற சிகிச்சை நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஒழுங்கான முறையில் இல்லை என அங்கு சென்ற நோயாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதிகளவான நோயாளர்கள் அங்கு செல்கின்றனர் அவர்களுக்கான குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் வசதிகள் சுடு தண்ணீரை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் சொல்லப்பட்ட செயற்பாடுகளை செய்வதற்கு கூட அங்கு உரிய வசதிகள் இல்லை எனவும் அங்கு இருக்கின்ற தங்கும் இடங்கள் கூட உரிய வகையில் இல்லை எனவும் அங்கு சென்றவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு திடீரென அதிகரித்துள்ள தொற்று காரணத்தினால் சுகாதாரத்துறையினர் திண்டாடி வருகின்ற நிலையில் பொதுமக்கள் இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில் மாவட்ட வைத்தியசாலையில் கூட உரிய வசதிகள் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இயங்கி வருகின்றது. இவ்வாறான நிலைமையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கூட கொரோனாக்காக விசேடமாக அமைக்கப்படாத நிலைமையில் மக்கள் அவதானமாக சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்களுடைய சமூகத்திற்கு இந்த தொற்று பரவாமல் காப்பாற்றுவதற்காகவும் செயற்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற அனைத்து பொதுமக்களும் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்