கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும். எனவே, பிரச்சினைகளை விரைவில் பேசித் தீர்த்து முன்னோக்கி பயணிப்பதே அரசின் எதிர்ப்பார்ப்பாகும்.
என்று சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான மொட்டு கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறான கருத்துகள், நிலைப்பாடுகள் இருக்கக்கூடும். இவை இணைந்து கூட்டணி அமைக்கும்போதும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படலாம். எனவே, பிரச்சினைகள் இருப்பின் அவை குறித்து பேசி, தீர்த்து கூட்டணி அரசாக முன்னோக்கி பயணிப்போம்.
தற்போதைய சூழ்நிலையில் உலக பொருளாதாரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சட்ட திட்டம், கொள்கைத் திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது – என்றார்.