அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம்! – எல்லே குணவங்ச தேரர் சூளுரை

எல்
எல்

அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனி நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நாடாளுமன்ற  சுற்றுவட்டத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்தைப் பாதுகாப்புத் தரப்பினரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தார்கள் என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது.

பொதுமக்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைமைகள், ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. நாட்டில் தற்போது  ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் அரச அதிகாரத்துடன் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

 அரசின்  முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறிப்பிட்டுக் கொண்டு அரசு முன்னெடுக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனி நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தேசிய வளங்களைப் பிற நாட்டவர்களுக்குத் தாரைவார்க்கும் முயற்சியை  அரசு தற்போது முன்னெடுத்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள பெரும்பாலான காணிகள் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் இரகசியமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம் – என்றார்.