நாட்டை முடக்க மக்கள் விரும்பவில்லை – இராணுவத் தளபதி

நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்கிறோம் என்று மக்கள் கூறுவதாலேயே நாட்டை முடக்காது வைத்திருக்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே இராணுவத் தளபதி இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நேரத்தில் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறி வருகின்றனர். ஆனால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நாட்டை முடக்காது இருக்கின்றோம்.

இதன்படி மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியுமாக இருக்கும்.

இதனால் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.