தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

IMG 7859 16 4
IMG 7859 16 4

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்சூள் (டோர்ச் லைட்) கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2015 ஜூன் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்த கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இடையில் இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக  வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.  தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன். எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம். எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி, ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற, அனைத்து உடன்பிறப்புகளினதும், இரத்தத்தின் இரத்தங்களினதும் வாழ்த்துகளையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.