எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13,832 மீனவர்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 10,175 மீனவர்களுக்கும், கொழும்பில் 2,956 மீனவர்களுக்கும் மற்றும் களுத்துறையில் 701 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 1,200 மீனவர்களுக்கு இன்னும் முதற்கட்ட இழப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை.
மேலும் 1,200 மீனவர்களுக்கு தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மீனவர்கள் 15,032 பேர் குறித்த கப்பல் தீ விபத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.