காலத்தின் தேவை கருதி தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியில் நிற்பது நல்ல சகுனமாகும் – சிவதர்சன்

அரசின் சனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக காலத்தின் தேவை கருதி கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல சகுனமாகும். இவ்வாறான கருத்தொருமித்த செயற்பாட்டை தமிழரசின் இளைஞர் அணி வரவேற்கின்றதென இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சி.சிவதர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக காலம் காலமாக அரசியல் கட்சிகள், போராட்ட அமைப்புகள் தொடர்ந்தும் போராடி வந்துள்ளன. நோக்கங்கள் ஒன்றாக இருப்பினும் துரதிஸ்ரவசமாக கட்சி அரசியலை முன்னிறுத்தி அவ்வப்போது கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து நிற்பது தமிழ் மக்களின் அரசியல் இருப்பை மேலும் அதாள பாதாளத்தில் தள்ளிவிடும்.

குறிப்பாக, சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறியுள்ள இந்தஅரசு தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையே சட்ட சவாலுக்குட்படுத்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுவருகின்றது.

தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்றால் அரசின் சனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். இவ்வாறான சூழ்நிலையில் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் ஓரணியில் நின்று செயற்படுவது வரவேற்க கூடியதொன்றாகும்.

இந்த ஒற்றுமை தொடரவேண்டுமென்பதே அனைத்து தமிழ் மக்களினதும் விருப்பமாகும்.

தற்போதைய அரசின் சனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல சகுனமாகும். இந்த ஒற்றுமை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும்வரையாவது நிலைத்து நிற்கவேண்டும். இதனை அரசியல் கட்சிகளின் மூத்ததலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் பிரிந்து நிற்பது எதிரிக்கு சாதகமாகவே அமையும். இவ்வாறானதொரு அரசியல் களநிலையில் அரசின் சனநாயக விரோத போக்கினை கண்டித்து தமிழர் தேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் வருகின்ற 26ம் திகதி நடைபெறவுள்ள உண்ணா நோன்பு நிகழ்விற்கும் அதனை தொடர்ந்து 28ம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக முடக்க போராட்டத்திற்கும் அனைத்து தமிழ் உணர்வாரள்களின் ஆதரவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினராகிய நாம் கோரி நிற்கின்றோம் என அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.