தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுதலைப் புலிகள் தொடர்பிலும், திலீபன் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும், அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்.
எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.