இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
தெல்லிப்பழை வைத்தியசாலை திறக்கப்பட்டபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோரும்அங்கு வருகை தந்திருந்தனர்.
அப்போது அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
அந்த வைத்தியசாலையை மீள எடுத்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அது எமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் செயல்.
சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடக்கின்றது. அந்த வகையில் எமது அண்டை நாடான இந்தியாவுடன் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
எனினும் இன்னும் அது முழுமையாக அமுல்படுத்தவில்லை அதன் ஒரு அம்சமாகவே மாகாணசபை கொண்டுவரப்பட்டது.
அர்த்தபூர்வமான அதிகார பரவலாக்கல் ஒன்றை வழங்க வேண்டும் என தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தெரிவித்தார். 13 க்கும் மேலாக அதிகாரங்களை வழங்குவதாக அவர் தெரிவித்தார் எனினும் நடந்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.