கடும் எதிப்புகளுக்கு மத்தியில்20ஆவது திருத்தம் – மிக முக்கிய மாற்றங்கள் அமைச்சர் அலிசப்ரியினால் முன்வைப்பு!

ali
ali

புதிய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தத்தின் 5 ஆவது சரத்தின்படி ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என குறிப்பிடப்பட்டிருநத நிலையில், திருத்தங்கள் ஊடாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருவருட காலப்பகுதியில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவதாக 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதிலே, நாடாளுமன்றத்தை இரண்டரை வருடத்தில் கலைப்பதற்கும், அது சார்ந்த தீர்மானங்கள் ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியுமெனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைவாக 22 ஆவது சரத்தினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவும், தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவும் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை அமைச்சுக்கள் 30 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகள் 40 ஆகவும் கொண்டுநடத்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.