முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல், ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்!

முல்லைத்த்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீது மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பலால்  தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (03.11.2020) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

பாதிக்க பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன்,சி.தனஞ்சயன்,செல்வி ருஜிக்கா, பார்த்தீபன், துஸ்யந்தி ஆகிய சட்டத்தணிகள் முன்னிலையாகியுள்ளார்கள். 

குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள். நான்காம், ஜந்தாம் சந்தேக நபர்கள், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடைபெறவேண்டும். 

இரண்டாம், மூன்றாம் சந்தேக நபர்கள் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

முதலாவது சந்தேகநபர் அனோயன் என்பவர் பிணையில் விடப்படவேண்டும் என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இன்று மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

இது சாதாரணமாக அடித்த ஒரு வழக்கு அல்ல சமூகப்பொறுப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்பினை நிறைவேற்றுகின்றபோது நிகழ்ந்த சம்பவம். சமூக விரோத செயற்பாட்டினை அவர்கள் வெளிக்கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்தபோது அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.

காடழித்தல் என்பது தெளிவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோதும் வனப்பாதுகாப்பு திணைக்களம் காவல்துறை அதற்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததை வெளிக்கொண்டு வருவதற்காக அங்கு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதனை நீதிமன்றம் பாரிய சமூகவிரோத செயற்பாட்டுடன் சம்மந்தப்பட்டதாக கருதவேண்டும் என்று சமர்பணம் செய்துள்ளேன். 

முதலாவது சந்தேக நபர் சார்பில் தேவைக்கு அதிகமாக விளக்கமறியலில் வைத்திருக்க கூடாது விடுவிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பிணை வழங்கப்படவில்லை. மூன்று சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றிற்கு கொண்டுவரப்படவில்லை. ஆனால் நீதிபதியுடன் உரையாடக்கூடியதாக  காணொளி மூலமாக தொலைபேசியில் அவர்கள் தொடர்பு படுத்திக்கொடுத்தார்கள். 

இந்த வேளையில் முதலாவது எதிரி தான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஊடகவியலாளர்கள் சார்பில் நாங்கள் மன்றில் அதற்க்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.  சாதாரண ஒரு தனிப்பட்ட தாக்குதல் சம்பவமாக இருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கொடுக்கலாம். ஆனால் இது பாரிய சமூகவிரோத செயற்பாட்டுடன் சம்மந்தப்பட்ட விடையம் ஆகையால் மன்னிப்பினை கொடுத்து விடுவிக்கும் விடையமாக கருத முடியாது  என்று சொல்லி உள்ளோம்.

இதனை ஏற்ற கௌரவ நீதிபதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு மூன்று சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்ரரவிட்டுள்ளார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.