கொரோனா ஒழிப்புக்காக ”பாதுகாப்பாக இருப்போம்” டிஜிடல் திட்டம் அறிமுகம்!

கொரோனா ஒழிப்புக்கு உதவுவதற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருப்போம்” (Stay Safe) டிஜிடல் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமும்செய்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றாளர்களின் தொடர்புகளை கண்டறிதல், நோய்க்காவிகளின் சுழற்சி கொரோனா பரவுவதை தவிர்ப்பதில் முக்கிய சவாலாக உள்ளது. “பாதுகாப்பாக இருப்போம்” டிஜிடல் திட்டம் இப்பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குகின்றது.

ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணி நேற்று ஒன்றுகூடிய போது தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வாவினால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

“பாதுகாப்பாக இருப்போம்” (stay safe) QR குறியீட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். கொரோனா தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும், வர்த்தக, அரச துறை நிறுவனங்களுக்கும் அனைத்து மக்களுக்கும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய எளிய முறைமையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Staysafe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்துவமான QR குறியீட்டை பெற முடியும். எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

திறன்பேசிகளை பயன்படுத்தி எந்தவொரு நிறுவனத்திற்கும் பெயர், முகவரி, உரிமையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்கி மிகவும் இலகுவாக QR குறியீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

திறன் பேசிகள் உள்ள, இல்லாத அனைவரையும் பதிவுசெய்து அவர்கள் சென்று வரும் அனைத்து இடங்களையும் அறிந்துகொள்ள முடியும். இது தொடர்பில் அனைத்து ஊடகங்களின் மூலமும் மக்களை தெளிவுபடுத்துவதற்கு தகவல், தொடர்பாடல் முகவர் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா ஒழிப்பு விசேட செயலணி மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் கொரோனா பரவல் தொடர்பான தற்போதைய நிலைமையினை ஜனாதிபதிக்கு விளக்கியது.

வைரஸை ஒழிப்பதற்கு தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கி வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அனைவரும் நாளாந்த செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்க தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.