அரச வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களில், ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகள் இல்லாதவர்களுக்கு, இன்று முதல் அஞ்சல் மூலம் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை அஞ்சல் சேவையுடன் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை இதற்காக முன்னெடுக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்துகள், நோயாளர்களின் வீடுகளுக்கே கிடைக்கவேண்டுமாயின், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை வழங்க வேண்டும்.
நோயாளர்கள் தங்களின், மருத்துவ சிகிச்சை கையேடுடன், உண்மையான முகவரியை குறிப்பிட்டிருக்காவின், தாங்கள் சிகிச்சைப்பெறும் வைத்தியசாலையை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தகவல்களை புதுப்பித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய செயற்படுவதன் மூலம், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்களுக்கான மருந்துகளை பொதிசெய்து, தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு, அஞ்சல் காரியாலயத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.