கிழக்கில் கொரோனா தொற்று 100 ஐ எட்டியது – அழகையா லதாகரன்

மட்டக்களப்பில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில்; 100 பேர் தொற்றாளர்களாக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் இன்று சனிக்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடியில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிவந்த மட்டக்களப்பை லொயிட்ஸ் அவனியூரைச் சேர்ந்த ஒருவருக்கு வியாழைக்கிழமை (05) பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் மணைவி, 16 வயது மகன், 14 வயது மகள் உட்பட 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இவர்களுடன் நெருங்கிப் பழகிய இருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஏறாவூரில் 4 பேர் உட்பட 6 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பேலியகொடை மீன்சந்தை தொத்தணியையடுத்து மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் 42 பேரும், செங்கலடியில் ஒருவரும், கிரானில் ஒருவரும், வெல்லாவெளியில் ஒருவரும், பட்டிருப்பில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவரும், ஏறாவூரில் 6 பேரும், செங்கலடியில் ஒருவரும், மட்டக்களப்பில் 5 பேருமாக மாவட்டத்தில் 60 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் பதியத்தலாவையில் 2 பேரும், தெய்யத்தைகண்டியில் 3 பேரும், அம்பாறையில் ஒருவரும், தமணையில் ஒருவர் உட்பட 7 பேருக்கும், கல்முனை சுகாதார பிரிவில் கல்முனை தெற்கில் 5 பேருக்கும், பொத்துவிலில் 7 பேருக்கும், சாய்ந்தமருதில் ஒருவருக்கும், இறக்காமத்தில் 6 பேருக்கும், அக்கரைப்பற்றில் ஒருவர் உட்பட 20 பேருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியில் ஒருவருக்கும், தம்பலகாமத்தில் ஒருவருக்கும் திருகோணமலையில் 5 பேருக்கும், மூதூரில் 6 பேர் உட்பட 13 பேருக்கும் தொற்றுறுதி கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கிழக்கில் 100 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.