2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

2021ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்குமான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம், பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 1.40 அளவில் பிரதமரால் இந்த ஆவணம் சமர்பிக்கப்படவுள்ளது.

இது இந்த நாட்டின் 75வது பாதீட்டு அறிக்கையாக அமையவுள்ளது.

2021ஆம் நிதி ஆண்டில் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு 2678 பில்லியன் ரூபாவையும், இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

பிரதமரினால் பாதீடு முன்வைக்கப்பட்ட பின்னர் நாளை முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பாதீடு தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும்.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணி முதல் 5.30 மணிவரை இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் பாதீட்டின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் இன்றையநாள் முதல் பாதீட்டின் மீதான விவாதம் நடத்தப்படும் முழுமையான காலப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், பாதீடு முன்வைக்கப்படும் காலப்பகுதியில் சபாநாயகரின் பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் பகுதி மற்றும் ஊடகவியலாளர் பகுதி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதீடு முன்வைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேனீர் விருந்துபசாரம் இவ்வருடம் இடம்பெறவிருக்கின்றபோதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்காக மாத்திரம் இது மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.