மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 120 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

567305
567305

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையும் உள்ள ஒருவாரத்தில் 120 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் கடந்த 11 மாதத்தில் 2 ஆயிரத்தி 713 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

குறித்த வாரத்தில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 58 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 நோயாளர்களும், கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 நோயாளர்களும், வாகரை, மட்டக்களப்பு, வவுனதீவு ஆகிய பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக 120 பேர் டேங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஏறாவூர், பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை. எனவே மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.