14 வயது சிறுமியை கடத்தி சென்ற நபர் கைது!

kaithu

14 வயது சிறுமியொருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர் லுனுகம்வெஹெர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை – போலான பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை ஹம்பாந்தோட்டை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மேற்படி நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த இருவரும் முகப்புத்தகத்தினூடாக அறிமுகமாகி காதலித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 8ம் திகதி முதல் தனது மகளைக் காணவில்லையென குறித்த சிறுமியின் தந்தை லுனுகம்வெஹெர காவல் துறையில் முறைப்பாடு செய்ததையடுத்தே இது குறித்தான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரின் தொலைபேசித் தரவுகளினூடான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 10 நாட்கள் கடந்த நிலையில் இவ்விருவரும் அம்பலாந்தோட்டை – போலான பிரதேசத்தில் பயிர் நிலமொன்றில் அமைக்கப்பட்டிருந்த மரக்குடிலில் தங்கியிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் சகோதரன் இது குறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்து எச்சரித்ததையடுத்து மேற்படி சிறுமியின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த சந்தேக நபர் மினுவாங்கொடையிலிருந்து வருகை தந்து சிறுமியுடன் இவ்வாறு இருந்ததாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

பேனைகள் வாங்குவதற்கு கடைக்குச் செல்வதாகக் கூறியே குறித்த சிறுமி மேற்படி சந்தேக நபருடன் சென்றுள்ளதாகவும் தொடர் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.