வவுனியா ஆசிகுளம் கிராம மக்களை இன்று(12) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
ஆச்சிபுரம் கிராம மக்களின் பூர்விக காணிகளை வன வள திணைக்களத்தினர் தமக்கு சொந்தமான காணி என கூறி எல்லைப்படுத்தியுள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு சென்றிருந்தார்.
ஆசிகுளம் கிராம மக்கள் 1985 ஆம் ஆண்டு தொடக்கம் குறிப்பிட்ட காணியினை துப்பரவு செய்து பாராமரித்து வந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக பற்றை காடுகள் வளர்ந்துள்ளன.
தற்போது அதனை துப்பரவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொள்ள முற்பட்டபோது வனவள திணைக்களத்தினர் இக்காணி வனவள திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறி தடுத்து நிறுத்தியதோடு அக்காணிக்குள் மீள் காடு உருவாக்கலுக்கான மரங்களையும் நாட்டியுள்ளதாக இப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிணறுகள் வெட்டப்பட்டு நீண்டகாலமாக பாராமரிக்கப்பட்டு வந்த தமது காணிகளுக்குள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்டுள்ள தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த மக்களை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தார்.
குறித்த காணியை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மக்களிடமும் அவர்களது ஆவணங்களை பார்வையிட்டிருந்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில்,
வனவள திணைக்களத்தின் இச் செயற்பாடானது அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற இன அழிப்பு செயற்பாட்டின் மற்றுமொரு வடிவமாகவே இது அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.
இதன்போது சட்டத்தரணி சுகாஸ்,பிரதேச சபைகளின் உறுப்பினர்களான செல்வநாயகம் (சுரேஸ்), சஞ்சுதன் உட்பட தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் முக்கியஸ்தர்களும் வருகை தந்திருந்திருந்தனர்