கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தபுரம் கரும்பு தோட்ட காணி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவியுள்ளன.
1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் சீனி உற்பத்தி நிறுவனம், 1983ம் ஆண்டளவில் சீனி உற்பத்தி செயற்பாட்டினையும், கரும்பு செய்கையினையும் முற்றாகவே கைவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர் தென்னை மற்றும் உப பயிர் செய்கை மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் போர் சூழல் காரணமாக வெளிநாடுகளிற்கு செல்கின்றபோது முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2008ம் ஆண்டுவரை காணியில் உள்ள வருமானங்களை எந்தவித அரச வரிகளும் செலுத்தாமல் தேறிய இலாபமாக வருடம் ஒன்றிற்கு 24 லட்சம் வீதம் 25 வருடங்களாக பெற்று வந்துள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது குறித்த காணியின் ஊடாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100 லட்சம் ரூபா இலாபமாக பெறப்பட்டு வருவதாக, கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான தயாபரன் தெரிவிக்கின்றார்.