வவுனியாவில் மேட்டுப்பயிர் செய்கை செய்யப்பட்ட சில இடங்களில் சோளப்பயிர் செய்கை முற்றிலுமாக அழிவடைந்துள்ளது.
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மேட்டுப்பயிர் செய்யப்பட்ட இடங்களில் சோளப்பயிர்கள் படைப்புழுவின் கடுமையான தாக்கத்தினால் அழிவடைந்துள்ளது. இதனால் சோள பயிர்ச்செய்கையினை முற்றிலுமாக கைவிட வேண்டியுள்ளதாக அப்பகுதி சோள பயிர்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுமார் 13 தொடக்கம் 14ஏக்கர் வரையான சோளம் இம்முறை அழிவடைந்துள்ளது. இதனால் மக்கள் இம்முறையும் பாரிய ஒரு நஸ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விவசாயி ஒருவர் கூறுகையில்,
நாம் வருடந்தோறும் மேட்டுப்பயிர் செய்கையை செய்து வருகின்றோம். அதே போன்று இம்முறையும் அதிகமாக செய்திருந்தோம். மொத்தமாக 14ஏக்கர் சோளம் செய்யப்பட்டுள்ளது. 4ஏக்கர் சோளம் மட்டும் நான் செய்துள்ளேன். உழவு, கூலி, சோளம் விதை , மருந்து, பசளை, நடுகை கூலி எல்லாம் மொத்தம் ஒன்றரை இலட்சம் செலவு இப்போது வரைக்கும் முடிந்துள்ளது.
இதனை அறுவடை செய்தால் 3இலட்சம் ரூபாய் இலாபத்தை எடுத்திருப்போம் இந்த படைப்புழு தாக்கத்தினால் முழுவதும் அழிவடையும் நிலையில் உள்ளது .
இதனை கைவிட்டால் செலவு செய்ததும் வராது என்ன செய்வது என்று தெரியவில்லை. இது தொடர்பான அதிகாரிகள் பார்வையிட்டிருந்தனர். எமக்கு இந்த நஸ்டத்திற்கான ஓர் உதவி திட்டத்தை மானிய முறையில் தந்துதவுவார்கள் என நம்புகின்றோம் என மக்கள் தெரிவித்தனர்.