வட மாகாணத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்கள் 13 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.


வவுனியா பட்டாணி சூர் பகுதியில் நேற்றுமுன்தினம் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் எரிக்கலம்பிட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் கொழும்பு சென்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை  கண்டறியப்பட்டது. அதனால் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.


அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் கேகாலையைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நல்லூரில் வசிக்கும் ஒருவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று 242 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.