மன்னாரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி பிரார்த்தனை வாரம் ஆரம்பம்!

DSC 0013
DSC 0013

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மஞ்சள் மற்றும் கருப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு இறை பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ, வடக்கு, கிழக்கு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னாரில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மக்களுடன் இணைந்து நாங்கள் இந்த வாரத்தில் அமைதியான முறையில் தமது கிராமங்களில் பொது இடங்களில் ஒன்று கூடி இறை பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளான சுமார் 147 ற்கும் மேற்பட்டவர்களை பொங்கல் பரிசாக அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு- கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து இந்த பிரார்த்தனை வாரத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.