வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகையினையும், 15 ஆயிரம்ரூபாய் பணத்தினையும் திருடிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
நேற்றையதினம் இரவு 11 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு உறங்கிக்கொண்டிருந்த முதியவரையும்,பெண்மணியையும் வாள் முனையில் அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட தங்க நகைகளையும்,15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளனர் .இதேவேளை மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சத்தம் கேட்டு வெளியில் எழுந்துவந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டருந்ததாகவும், முகமூடி அணிந்திருந்ததுடன், வாள்களையும் கையில் வைத்திருந்தது அச்சுறுத்தியதாக தெரிவித்த காவல்துறையினர் மொத்தமாக 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரணீத் திசாநாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.