வவுனியா பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

1 29
1 29

வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் வான் கதவுகள் அடைமழை காரணமாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் பாவற்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், ராஜேந்திரன்குளம் மற்றும் கல்லாறு அணைக்கட்டு ஆகியன வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வான் பாய்ந்த நிலையில், வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தது.

இதன் காரணமாக மத்திய நீர்ப்பாச திணைக்களத்தின் பொறியியலாளர்களாகிய எந்திரி.குமாரசாமி, இமாசலன் மற்றும் பிரிவு உதவியாளர் க.கஜமுகதாஸ் ஆகியோரின் தலைமையில் குளத்தின் மூன்று வான்கதவுகளும் ஒரு அடி திறக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நீர்ப்பாச திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் இமாசலன் நீர்மட்டம் அதிகரித்தால் மீண்டும் வான்கதவுகள் மேலதிகமாக திறக்கப்படும் என்றும் அதன் காரணமாக தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.