அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பரீட்சையின் போது பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத மேற்பார்வையாளர் மாணவர்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பரீட்சைகள் ஆரம்பமாக முன்னர் சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் பரீட்சை நடந்துகொண்டிருக்கும் வேளையில் குறித்த முறைகேட்டில் இடம்பெற்ற மாணவரை பரீட்சை எழுத அனுமதிக்காது வெளியேற்றியுள்ளார்.
பரீட்சை முடிவுற்று குறித்த மேற்பார்வையாளர் வெளியில் வருகின்ற வேளையில் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் இரு மேற்பார்வையாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து சம்மாந்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.