மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 7 கிலோ கிராம் கஞ்சா கடத்திய ஒருவரை மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் வைத்து இன்று (21) பகல் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி பிள்ளையாரடி பகுதியில் சம்பவதினமான இன்று போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப்பொருட்கள் போன்று கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன் 7 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.